

பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குள் ஊடுருவ முயன்றபோது ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “நவ்காம் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீவிரவாதிகள் நடமாடுவது தெரியவந்தது. இதையடுத்து ரோந்து பணியில் இருந்த வீரர்கள் தீவிரவாதிகளை விரட்டுவதற்காக தாக்குதல் நடத்தினர்.
அப்போது, தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் பலியாயினர். எனினும் வேறு யாரேனும் அப்பகுதியில் பதுங்கி இருக்கிறார்களா என தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது” என்றார்.