Published : 27 Jul 2017 08:16 AM
Last Updated : 27 Jul 2017 08:16 AM
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியை செல்போனில் படம்பிடித்த பாஜக எம்.பி. அனுராக் தாக்குருக்கு, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடும் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர் அவையில் வருத்தம் தெரிவித்தார்.
மக்களவையில் கடந்த 24-ம் தேதி பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சியினர் பேசினர். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் அவையின் மையப் பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். அங்கிருந்த ஊழியர்களின் மேசைகளில் இருந்து சில தாள்களை எடுத்து கிழித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இருக்கையை நோக்கி வீசினர்.
இதையடுத்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரை 5 நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கிடையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியை, பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் தன்னுடைய செல்போனில் படம் பிடித்தார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுராக் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகருக்கு ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த் மான் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் மக்களவை நேற்று பிற்பகல் 12.45 மணிக்கு மீண்டும் கூடியதும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தப் பிரச்சினையை எழுப்பினார். அவர் பேசும்போது, ‘‘நாடாளுமன்ற வளாகத்தில் செல்போனில் படம் பிடித்ததற்காக ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த் மான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் 2 தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், அனுராக் தாக்குர் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று கேள்வி எழுப்பினார். அதை தொடர்ந்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசும்போது, ‘‘இதுதொடர்பாக எனது கவனத்துக்கு எதுவும் கொண்டுவரப்படவில்லை. அப்படி யாராவது செல்போனில் படம் பிடித்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது’’ என்றார். மேலும், அனுராக் தாக்குரைப் பார்த்து, ‘‘நீங்கள் செல்போனில் படம் பிடித்திருந்தால், இந்த அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று கண்டித்தார்.
அதைத் தொடர்ந்து அனுராக் பேசும்போது, ‘‘செல்போனில் படம் பிடித்ததற்காக வருத்தம் தெரிவித் துக் கொள்கிறேன்’’ என்றார்.
அதை ஏற்றுக் கொண்ட சுமித்ரா மகாஜன், ‘‘இனிமேல் இந்த தவறு மீண்டும் நடக்காமல் நடந்து கொள்ளுங்கள். மேலும், அவையில் உறுப்பினர்கள யாரும் செல்போனில் படம் எடுக்கக் கூடாது’’ என்று கடுமையாக எச்சரித்தார். எனினும், காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT