Published : 01 Jul 2017 12:12 PM
Last Updated : 01 Jul 2017 12:12 PM
ஹரியாணாவில் ஓடும் ரயிலில் இருந்து மாற்றுத்திறனாளி ஒருவரை இளைஞர்கள் மூவர் தூக்கி வீசிய கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
அதுவும், ரயிலில் புகைபிடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதற்காக அந்த நபர் வெளியே வீசி எறியப்பட்டுள்ளார்.
ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்தவர் உபேந்தர் பிரசாத் (45). மாறுத்துத் திறனாளியான் இவர் டெல்லி செல்வதற்காக சண்டிகர் ரயில் நிலையத்திலிருந்து சண்டிகர் - கேரளா சம்பர் கிராந்தி ரயிலில் ஏறியுள்ளார்.
ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் அவர் இருந்த பெட்டியில் பயணித்த இளைஞர்கள் மூவர் சிகெரட் புகைத்துள்ளனர். அவர்களிடம் பிரசாத் ரயிலில் சிகெரட் புகைக்க வேண்டாம் எனக் கோரியுள்ளார்.
ஆனால், பிரசாத் கூறியது அந்த இளைஞர்களுக்கு ஆத்திரமூட்டியுள்ளது. பிரசாத்தை வசை பாடியதுடன் அவரை தாக்கவும் செய்துள்ளனர். கழுத்தை நெறிக்கவும் முயற்சித்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல்போன், பர்ஸ் ஆகியவற்றை பறித்துள்ளனர்.
உபேந்தரை தாக்கியதோடு நிறுத்தாமல், மாடல் டவுன் அருகே ரயில் வந்தபோது மூன்று இளைஞர்களும் சேர்ந்து உபேந்தரை வெளியே வீசியுள்ளனர். இதில் பிரசாத்தின் கால், தோள்பட்டை எலும்புகள் முறிந்தன. தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் மயக்கமடைந்த பிரசாத் நினைவு திரும்பியதும் அவ்வழியாக சென்றவர்களிடம் நடந்தைக் கூறி உதவி கோரியுள்ளார்.
இவை அனைத்தையும் பிரசாத் ரயில்வே போலீஸாரிடம் அளித்த புகாரில் வாக்குமூலமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக அம்பாலா கண்டோன்மெண்ட் காவல் அதிகாரி ராஜ் பச்சன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT