Published : 09 Apr 2014 10:42 AM
Last Updated : 09 Apr 2014 10:42 AM

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சி பிஹாரில் தொடர்ந்து வெற்றி பெறும் ஜெய் நாராயண் : இம்முறை மகனை களத்தில் இறக்கியுள்ளார்

பிஹார் மாநிலம் முசாபர்பூர் மக்களவை தொகுதியில், ஒவ்வொரு தேர்தலுக்கும் கட்சி மாறி போட்டியிட்டு, தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஜெய் நாராயண் நிஷாத், இம்முறையும் கட்சி மாறிவிட்டார். ஆனால் இம்முறை தனக்கு பதிலாக தனது மகனைகளத்தில் இறக்கியுள்ளார்.

2009-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் முசாபர்பூரில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேப்டன் ஜெய் நாராயண் நிஷாத். ஆனால் இவர் 2004-ல் நடந்த தேர்தலில் இதே தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முன் 1998-ல் நடந்த தேர்தலில் இவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பிலும், 1996-ல் நடந்த தேர்தலில் ஜனதா கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து கட்சி மாறினாலும் ஜெய்நாராயண் வெற்றிக்கு அவர் சார்ந்திருக்கும் ’நிஷாத்’ எனும் மீனவர் சமூகம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. முசாபர்பூரில் மீனவ சமுதாயத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இந்த சமூகத்தின் ஒரே தலைவராக ஜெய்நாராயண் இருப்பதால் இவர் எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் வெற்றி பெற்று விடுகிறார்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் இவர் கட்சி மாறுவதற்கு அவர் சார்ந்திருந்த கட்சிகள் மீண்டும் வாய்ப்பளிக்காததே காரணம். அந்த வகையில் இம்முறை ஐக்கிய ஜனதா தளம் கட்சி அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காததால் பாரதிய ஜனதாவுக்கு தாவிக்கொண்டார்.

ஆனால் இம்முறை அவர் போட்டியிடவில்லை. தனக்கு பதிலாக தனது மகன் அஜய் நாராயண் நிஷாத்தை போட்டியிட வைத்துள்ளார். தந்தையின் கட்சி மாறும் பணியை வரும் தேர்தல்களில் மகன் தொடர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x