Published : 09 Jan 2014 01:11 PM
Last Updated : 09 Jan 2014 01:11 PM

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் தவறு நிகழ்ந்து விட்டது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல்

“நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஏதோ தவறு நிகழ்ந் திருக்கிறது. நம்பிக்கையின் அடிப்படையில் எடுக்கப் பட்ட முடிவுகள் தவறாகிவிட்டன” என உச்சநீதிமன்றத் தில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூலம் இ.வாஹன்வதி ஒப்புக்கொண்டுள்ளார்.

தனியார் நிறுவனங்களுக்கு 57 நிலக்கரிச் சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கப்பட்டதில், மத்திய அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ 16 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வாஹன்வதி, சுரங்க ஒதுக்கீட்டில் தவறு நிகழ்ந்துள்ளது என ஒப்புக் கொண்டார்.

அவர் கூறுகையில், “நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது. ஒதுக்கீடு இன்னும் நேர்த்தியான முறையில் நடந்திருக்க வேண்டும். நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் நாம் முடிவுகள் எடுக்கிறோம். ஆனால், தவறு நிகழ்ந்து விடுகிறது. தவறுகள் உரிய முறையில் சரி செய்யப்படும் என்றார்.

சுரங்கங்களை மறு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதற்கு, “அடுத்த வாரம் இதுதொடர்பான தெளிவான முடிவை அரசு எடுக்கும்” என்றார் வாஹன்வதி.

பிரதமர் பதவி விலக வலியுறுத்தல்:

பிரதமர் பதவி விலக வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மீம் அப்ஸல், “பிரதமர் ராஜினாமா செய்யக் கோருவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. இதை நாங்கள் பொருட்படுத்தப்போவதில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x