Published : 08 Nov 2013 11:12 AM
Last Updated : 08 Nov 2013 11:12 AM

தெலங்கானா விவகாரம்: டெல்லியில் முக்கிய அலோசனை

தெலங்கானா விவகாரம் தொடர்பாக, டெல்லியில் காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

ஆந்திராவைப் பிரித்து தனி தெலங்கானா அமைக்க ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் கட்சி மேலிடத்தின் எதிர்ப்பையும் அவர் சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறுகிறது. திக்விஜய் சிங் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் போட்ஸா சத்ய நாராயணன், மத்திய அமைச்சர் கே.சிரஞ்ஜீவி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஹைதராபாத்தில் கூட்டத்தை நடத்துவதற்குப் பதிலாக டெல்லிக்கு வருமாறு கட்சி மேலிடம் சம்மன் அனுப்பியதை அடுத்து கிரண்குமார் ரெட்டி டெல்லி சென்றுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எழுதிய கடிதத்தில்: ஆந்திர மாநிலத்தை 2-ஆக பிரித்து தெலங்கானா அமைக்கும் முடிவு எடுக்கப்பட்ட முறையில் தவறு இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு, தனி மாநிலம் அமைக்கும் பணியை துரிதப் படுத்தியுள்ள நிலையில், ஆலோசனை கூட்டத்தில் ஆந்திர சட்டசபை கூடும் தேதி மற்றும் தெலங்கானா அமைப்பதற்கான வரைவு மசோதா குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x