Published : 03 Nov 2013 11:21 AM
Last Updated : 03 Nov 2013 11:21 AM

காங். எம்.பி. பாலியல் தொந்தரவு: மலையாள நடிகை ஸ்வேதா மேனன் புகார்

காங்கிரஸ் எம்.பி. ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறியுள்ள மலையாள நடிகை ஸ்வேதா மேனன், இது குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் முறைப்படி புகார் அளிக்கப்போவதாகத் தெரிவித்தார்.

நடிகை ஸ்வேதா மேனன் குற்றம்சாட்டுவது, 73 வயது பீதாம்பர குருப் எம்.பி.யை தான் என்பது தெரியவருகிறது.

இது தொடர்பாக கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வேதா மேனன், "ஒரு பெண்ணாக, சிறுமைப்படுத்தப்பட்டதாகவும் அவமதிக்கப்படதாகவுமே உணர்கிறேன். முதல்வரிடம் முறைப்படி புகார் அளிப்பேன்" என்றார்.

அதேவேளையில், ஸ்வேதா மேனனின் புகாரை, காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, "தேர்தலையோட்டி, அரசியல் நோக்கத்துடன் கட்டவிழித்துவிடப்பட்ட விஷயமாகவே இதைப் பார்க்கிறேன். நான் ஓர் அரசியல்வாதி என்பதற்காக, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அடுக்குவது மனவலியை ஏற்படுத்துகிறது" என்றார்.

ஸ்வேதா மேனன் தனது கணவர் ஸ்ரீவல்சன் மேனனுடன், 'அம்மா' உள்ளிட்ட திரைப்படத் துறை அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தனது புகார் தொடர்பாக விவரித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. மீதான புகாரை, முதலில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததாகவும், ஆனால் அந்தப் புகாரை ஏற்க மறுத்தது தனக்கு இன்னும் வேதனையைத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஸ்வேதா மேனன் வெள்ளிக்கிழமை மாலை கொல்லம் பகுதியில் நடந்த படகுப் போட்டிக்குச் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில்தான் காங்கிரஸ் எம்.பி. பாலியல் தொந்தரவுக்கு ஆளதான கூறப்படுகிறது.

அதுதொடர்பாக தொலைக்காட்சியில் வெளியான பதிவில், காங்கிரஸ் எம்.பி. தனது கையை, ஸ்வேதா மேனனைத் தொடுவதற்காக நீட்டியது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, கேரளாவில் திரைத் துறையினர் மற்றும் மகளிர் அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x