Published : 27 Sep 2016 10:46 AM
Last Updated : 27 Sep 2016 10:46 AM
சோதனை, பறிமுதல் போன்ற நடவடிக்கைகளின்போது சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்துவதிலிருந்து சாமானிய மனிதர்கள் தற்காத்துக் கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரும் மனு மீது விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஊழல் புகார்களின் மீது சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை, சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தும்போது அவர்களுக்குரிய அதிகார வரம்பை மீறி செயல் படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
உபேந்திர ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் குடிமகன்களின் வீடுகளில் சோதனையிடும்போது அவர்களிடம் அத்துமீறுகின்றன என குற்றம் சாட்டியிருந்தார்.
எனவே குடியிருப்புப் பகுதிகளில் சோதனையிடும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.சி. பந்த் ஆகியோரடங்கிய அமர்வு, உள்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை, நிதி அமைச்சகம் உள்ளிட்ட மத்திய அமைச்சகங்கள், இந்திய சட்ட ஆணையம், சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு, வருவாய்த் துறை, அமலாக்கத் துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் உள்ளி்ட்ட அமைப்புகளுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பினர்.
இமாச்சலப் பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங், பெருநிறுவனங்கள் விவகாரத்துறை தலைமை இயக்குநர் பி.கே. பன்சால் உள் ளிட்டோர் வீடுகளில் அண்மையில் நடந்த சோதனைகளின்போது நடந்த சம்பவங்கள் மனுவில் உதாரணங்களாகக் கூறப்பட் டிருந்தன.
சிபிஐ அதிகாரிகளின் அதிகப்படியான கெடுபிடிகளால் பன்சாலின் மனைவி மற்றும் மகள் தற்கொலைக்கு முயன்றதும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
முன்னதாக இம்மனுவை தலைமை நீதிபதி டி.எஸ் தாகூர் விசாரிக்க மறுத்துவிட்டார். மனுவில் வீரபத்ர சிங்கின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரைத் தனக்குத் தெரியும் என்பதால் மனுவை விசாரிக்க நீதிபதி தாகூர் மறுத்துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT