Published : 09 Mar 2014 10:25 AM
Last Updated : 09 Mar 2014 10:25 AM

ஆந்திராவில் 2 மாதத்தில் 4 தேர்தல்: குழப்பத்தில் கட்சிகள்... தயார் நிலையில் மக்கள்!

தென் இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமாக விளங்கிய ஆந்திர மாநிலம், தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்துடன் கூடிய 10 தெலங்கானா மாவட்டங்கள் இனைந்து தெலங்கானா மாநிலமாக உருவாக உள்ளது. வரும் ஜூன் மாதம் 2ம் தேதி நாட்டின் 29வது மாநிலமாக அதிகாரப்பூர்வமாக தெலங்கானா மாநிலம் உருவாக உள்ளது.

சுமார் 58 ஆண்டு போராட்டத் திற்கு கிடைத்த பலனாக தெலங்கானாவாதிகள் குதூகலம் அடைந்துள்ளனர். அதே சமயத்தில், நாட்டில் மொழி அடிப்படையில் முதன் முறையாக பிரிக்கப்பட்ட ஆந்திர மாநில மக்கள், அரசியல் ஆதாயத்திற்காக மாநிலத்தை பிரித்து விட்டதாக குமுறி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட மாநில கட்சிகளும் நடை பெற உள்ள சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என தெரியாமல் குழப்பத்தில் உள்ளன. ஒரே மாநிலம் தெலங்கானா பிரச்சினையால் அரசியல் ரீதியாக மட்டுமின்றி அனைத்திலும் இரண்டாக பிளவு பட்டு உள்ளது.

மாநிலம் பிரிக்கபடுவதற்க்கு முன்னால், 294 சட்டமன்ற தொகுதிகளும் 42 நாடாளுமன்ற தொகுதிகளும் கொண்டது ஆந்திர மாநிலம் ஆனால் தற்போது, தெலங்கானாவில் 119 சட்டமன்ற தொகுதிகளும், 17 நாடாளுமன்ற தொகுதிகளும், சீமாந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிகளும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுமாக பிரிக்கப்பட்டுள்ளது.

மாநிலப் பிரிவினைக்கு முன்னதாகவே சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. அதாவது, இந்த தேர்தல்தான் ஒருங்கிணைந்த ஆந்திராவில் நடைபெறும் கடைசி தேர்தலாகும்.

தெலங்கானா பிரச்சினையின் பொது, மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இரு பகுதிகளிலும் செய்வதறியாது கை கட்டி நின்றன. இறுதியில் மாநில சீரமைப்பு மசோதா நிறைவேற்றப் பட்ட பின்னர், ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி உட்பட மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்.பி.,எம்.எல்.ஏ க்கள் என கட்சி பாகுபாடின்றி தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தெலங்கானா மாநிலம் அமைய கங்கனம் கட்டிக்கொண்டு பணியாற்றியது. இதில், ஆளும் கட்சியான காங்கிரஸ், தெலங்கானா மாநிலத்தை, தான் வழங்காவிட்டால் பா.ஜ கட்சி வழங்குவது உறுதி என தெரிந்ததால் தெலங்கானா மாநிலம் வழங்கி வாக்கு வங்கியை உறுதி படுத்தி கொள்ள முடிவு எடுத்தது.

தெலுங்கு தேசம் கட்சி, இரு பகுதியும் இரு கண்கள் என கூறி இப்போது வரை தனது நிலையை அறிவிக்காமல் இரு பகுதிகளிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, முதலில் மாநில பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு பின்னர், இரு பகுதியினருக்கும் சமமான நீதிகிடைத்தால் மட்டுமே மாநிலத்தைப் பிரிக்கவேண்டும் இல்லையேல், மாநிலத்தை பிரிக்க கூடாது என வலியுறுத்தியது.

ஆனால் தற்போது மாநில பிரிவினை ஏற்பட்ட பின்னர், சீமாந்திரா பகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ கட்சியினர் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட யாரும் பிரச்சாரம் செய்ய வில்லை. வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. கூட்டணி குறித்து பேச்சே இல்லை. ஏறக்குறைய இந்த இரு தேசிய கட்சிகளும் சீமாந்திரா பகுதியில் செல்வாக்கை இழந்து நிற்கிறது என அக்கட்சியை சேர்ந்த கட்சி நிர்வாகிகளே செய்வதறியாது வேறு கட்சிகளில் இனைந்து வருகின்றனர். தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியிடையே தான் சீமாந்திராவில் பலத்த போட்டி நிலவுகிறது.

தெலங்கானா பகுதிகளில் 7ம் கட்டமாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் தேர்தல்கள் வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி நடைபெறுகிறது.

சீமாந்திரா பகுதியில் இத் தேர்தல் 8ம் கட்டமாக வரும் மே மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது. மாநிலம் பிரிவினை பிரச்சனையை சமாளிக்க முடியாமல் கட்சிகள் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், ஆந்திர மாநிலத்தில், கட்சிகளின் எதிர்காலத்தையும், அரசியல்வாதிகளின் எதிர் காலத்தையும் இந்த தேர்தல் நிர்ணயிக்க உள்ளது.

இந்த நிலையில், இம்மாதம் வரும் 30ம் தேதி, மாநிலம் முழுவதும் 146 நகராட்சிகள், 10 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் பஞ்சாயத்து உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. வெறும் 2 மாதங்களில் 4 தேர்தல்களை இப்போது உள்ள சூழ்நிலையில் எப்படி சமாளிப்பது என அனைத்து கட்சிகளும் மிகவும் குழம்பி உள்ளன. மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என கணிக்க முடியாதபடி ஒரு இக்கட்டான சூழல் நிலவுகிறது.

ஆனால், இரு பகுதிகளிலும் மக்கள் வாக்களிப்பதில் தெளிவாக உள்ளனர். ஆனால் இதுவரை கட்சிகள்தான் குழப்பத்தில் உள்ளன. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் தேர்தல்களுக்கு முன்னர் வரும் உள்ளாட்சி தேர்தல்கள், ஒரு செமி பைனல் தேர்தல் என கூறப்படுகிறது. இந்த தேர்தல்கள் மூலம் மக்களின் அறியலாம் என அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x