ஆதார் இல்லாத பான் எண்கள் ரத்து செய்யப்பட மாட்டாது: மத்திய நேரடி வரி வாரியம்
ஆதார் எண் இல்லாத நிரந்தர கணக்கு எண்கள் (பான்) ரத்து செய்யப்பட மாட்டாது என்று மத்திய நேரடி வரி வாரியம் (Central Board of Direct Taxes) தெரிவித்துள்ளது.
ஆனால் ஜூலை 1-ம் தேதி முதல் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம் என்றும் கூறியுள்ளது மத்திய நேரடி வரி வாரியம்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆதார் அட்டை இல்லாதவர்கள், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் ஆகியோருக்கு வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய பான் எண்கள் போதுமானது என்று பகுதியளவில் சலுகை வழங்கியதையடுத்து, ஆதார் அட்டை இல்லாத பான் எண்கள் ரத்து செய்யப்படமாட்டாது என்று மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் நேற்று தனது உத்தரவில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைக்கும் அரசின் திட்டம் செல்லுபடியாகும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால் ஆதார் எண் இல்லாதவர்கள் வெறும் பான் எண்ணுடன் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தடையில்லை என்று ஆதார் இல்லாதவர்களுக்கும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் தற்காலிக விலக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
