

கலவரம் வெடித்த உத்தரப் பிரதேச மாநிலத்தின் சஹரான்பூர் மாவட்டத்துக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அம்மாநில போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.
சஹரான்பூர் மாவட்டத்தில் 23 மற்றும் 24-ம் தேதிகளில் கலவரம் மூண்டதில் இருவர் பலியாகி, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து 144 தடை உத்தரவு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கலவர இடத்துக்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வருகை தந்து பார்வையிட்டார். மேலும் யோகி ஆதித்ய நாத் அரசு சட்டம், ஒழுங்கை காப்பாற்றவில்லை என்று சாடினார்.
பகுஜன் தலைவர் மாயாவதி வருகைக்குப் பிறகு ஷபிபூர் கிராமத்தில் மீண்டும் கலவரம் மூண்டது. கடும் காவல்களையும் மீறி இந்தக் கலவரம் வெடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.