Published : 28 Sep 2013 10:50 PM
Last Updated : 28 Sep 2013 10:50 PM

அவசரச் சட்டம் - அக்.3-ல் மத்திய அமைச்சரவை முடிவு?

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதை முறியடிக்கும் அவசரச் சட்டத்தை வாபஸ் பெறுவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க அக்டோபர் 3 அல்லது 4-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூடும் என்று தெரிகிறது.

இந்தச் சட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து கமல்நாத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கருத்துப் பரிமாற்றத்தில் முரண்பாடுகள் இருப்பது இயல்பானது, இயற்கையானது, டெல்லி திரும்பிய பிறகு ராகுலின் கருத்து குறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமரும் கூறியுள்ளார். இதுதான் காங்கிரஸின் சிறப்பியல்பு என்றார்.

நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறும்போது, அரசுக்கு ஆலோசனை கூறுவது ஆளும் கட்சியின் கடமை. கட்சியின் வழிகாட்டுதலுக்கேற்ப ஏற்ப அரசின் முடிவுகள்கூட மாறியிருக்கின்றன. அரசின் கொள்கைகளை கட்சிதான் தீர்மானிக்கிறது. இந்தவகையில், கட்சியில் இருந்து ஒரு கருத்தோ, ஆலோசனையோ தெரிவிக்கப்பட்டால் அதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்றார்.

முன்னதாக, பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துவந்த இந்த அவசரச் சட்டத்தைக் கடுமையாச் சாடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குரல் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையில் பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x