Published : 18 Jun 2016 08:55 AM
Last Updated : 18 Jun 2016 08:55 AM

வாஸ்து பூஜை பெயரில் ரூ.1.3 கோடி மோசடி: போலி சாமியார் கைது

ஹைதராபாத் நகரில் தொழிலதிபர் வீட்டில் வாஸ்து பூஜை செய்வதாக கூறி, ரூ.1.3 கோடி பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற போலி சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.

ஹைதராபாத் எம்எல்ஏ குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் மதுசூதன் ரெட்டி. இவருக்கு சிவா என்ற சாமியார் கடந்த 6 மாதங்களுக்கு முன் அறிமுகமானார். இவர் மதுசூதன் வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதாகவும் இதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து அண்மையில் சிவா தனது சிஷ்யர்களுடன் மதுசூதன் வீட்டில் வாஸ்து பூஜை செய்தபோது, மயக்க மருந்து கலந்த இனிப்பு கொடுத்தாராம். இதை சாப்பிட்ட மதுசூதன், அவரது மனைவி, மகன் ஆகியோர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து, வீட்டில் இருந்த பணம், நகைகளுடன் சிவா தப்பிச் சென்றார்.

பிறகு மதுசூதன் தான் ஏமாற்றப் பட்டதை அறிந்து ஹைதராபாத் போலீஸில் புகார் அளித்தார். இதில் ரூ. 1.3 கோடி மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை போனதாக கூறியிருந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், இவர் சிவ சாமி, சிவ பாபா என்ற பெயர்களிலும் மோசடி செய்துள்ளார் என்றும் தெரிய வந்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சிவா, திருப்பதியில் சுமார் 6 வீடுகளில், லட்சுமி பூஜை செய்து பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி, ரூ. 63 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். இவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் விடுதலையான சிவா, தற்போது ஹைதராபாத்தில் மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில் பெங்களூருவில் சிவாவை ஹைதராபாத் போலீஸார் நேற்று கைது செய்தனர். இவருடன் கார் ஓட்டுநர், சிஷ்யர்கள் என மேலும் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x