Published : 03 Dec 2013 06:54 PM
Last Updated : 03 Dec 2013 06:54 PM

தெலங்கானாவை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது: பிரதமர்

தெலங்கானாவை உருவாக்குவாதற்கு அரசு உறுதிபூண்டுள்ளதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

டிசம்பர் 5-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் சில நாட்களே நடப்பதால், அதை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதற்கு ஒத்துழைப்பு தருமாறு, எதிர்க்கட்சிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கவிருப்பதையொட்டி, மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.

அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், குளிர்காலக் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தெலங்கானா குறித்து கேட்டதற்கு, தெலங்கானாவை உருவாக்குவதில் அரசு உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்தக் கூட்டத்தொடர் 12 வேலைநாட்களில் மட்டுமே நடைபெறும் என்பதால், இந்தத் தொடரை நீட்டிக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

இந்தக் குளிர் காலக் கூட்டத்தொடரில் தெலங்கானா மசோதா கொண்டுவரப்படும் என்றும், அதற்கு பல்வேறு கட்சிகளும் ஒப்புக்கொண்டதாகவும் மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, இந்தக் கூட்டத் தொடரில் தெலங்கானா மற்றும் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x