

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் பாண்டா என்பவர் மகாத்மா காந்தியின் படுகொலை குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறார்.
அண்மையில் இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மகாத்மா காந்தி கொலையில் தொடர்புடைய 3 குற்றவாளிகள் தப்பிச் சென்றது எப்படி? அவர்களை கைது செய்ய போலீஸார் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி படுகொலை தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங் களை வெளியிடும்படி பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிய ஆவல் கொண்டவர்களும், அவரைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் முழுமையான ஆவண காப்பகத்தை அமைக்கும்படியும் பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து மத்திய தகவல் ஆணையர் தர் ஆச்சார்யலு கூறும்போது, ‘‘நீதிபதி ஜே.எல்.கபூர் தலைமையில் நீதி விசாரணை குழுவை அரசு நியமித்திருந்தது. இக்குழு படுகொலைக்காக தீட்டப் பட்ட சதி மற்றும் பிற விவரங்களை விசாரித்து பல்வேறு தகவல்களை சேகரித்து வைத்திருந்தது. எனவே ஜே.எல்.கபூர் கமிஷனின் அறிக் கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். வரலாற்று நாயகர்கள் குறித்த சந்தேகங்களைத் தெளிய வைக்க வேண்டிய கடமை பிரதமர் அலுவலகம் உட்பட அதிகாரப்பூர்வமான துறைகளுக்கு உள்ளது’’ என்றார்.