Published : 25 Aug 2016 06:08 PM
Last Updated : 25 Aug 2016 06:08 PM

இலங்கை சிறைகளில் வாடும் தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டும்: இரா.சம்பந்தன் வலியுறுத்தல்

இலங்கை சிறைகளில் வாடும் தமிழ் கைதிகளை விடுதலைச் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 11 ஆயிரம் பேர் கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியின்போது விடுவிக்கப்பட்டனர். இன்னமும் பல்வேறு சிறைகளில் 250 தமிழ் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் பேசியதாவது:

உள்நாட்டுப் போர் முடிவடைந்து 7 ஆண்டுகளாகியும் இன்னமும் தமிழ் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியில்கூட 11 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் தற்போதைய அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது. தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இரா.சம்பந்தனின் கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினை தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, இரா. சம்பந்தன் சில நாட்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார். நீதித்துறை அமைச்சர், அத்துறையின் மூத்த அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x