

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ஹரி நாராயண் ராய்க்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பிஎம்எல்ஏ சட்டம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு (2005-ம் ஆண்டு) அமலுக்கு வந்தது. இந்நிலையில் இந்த சட்டத்தின் கீழ் ஹரி நாராயண் குற்றவாளி என முதன்முறையாக சிறப்பு நீதிபதி பி.கே.திவாரி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.
இதன்படி, ரூ.3.72 கோடி அரசு பணத்தை முறைகேடு செய்த வழக்கில், ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் ஹரி நாராயண் ராய்க்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட் டுள்ளது. இதை செலுத்தத் தவறினால் கூடுதலாக 18 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்
இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2005 முதல் 2008 வரையில் அமைச்சராக இருந்த ராய், அரசு பணத்தை முறைகேடு செய்து சட்டவிரோதமாக பல்வேறு சொத்துகளை வாங்கி உள்ளார். இந்த குற்றச்சாட்டு நிரூபணமானதால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர்கள் மது கோடா, அர்ஜுன் முண்டா மற்றும் சிபு சோரன் ஆகியோரது தலைமையிலான அரசுகளில் பல்வேறு துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்துள் ளார் ஹரி நாராயண் ராய்.