Last Updated : 24 Mar, 2017 08:02 PM

 

Published : 24 Mar 2017 08:02 PM
Last Updated : 24 Mar 2017 08:02 PM

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடியா? தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்தில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்தது. உ.பி.யில் பாஜக 324 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி புகார் தெரிவித்தார். மேலும், வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சாப்ட்வேர் நிபுணர்களின் துணையுடன் தீவிர விசாரணை நடத்த வேண்டும். மேலும், வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்தது குறித்து எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தவும், அதன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

மனுவில் சர்மா மேலும் கூறும்போது, ‘‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் தொழில்நுட்ப, இயந்திரவியல், சாப்ட்வேர் தகவல்கள் ரகசியமாக இருக்கும் வரையில், அதில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. இதன்மூலம் எந்த ஒரு நிபுணராலும் ‘ரிவர்ஸ் இன்ஜினீயரிங்’ மூலம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள தகவல்களை எடுக்க முடியும். ஒயர்லெஸ் கருவி அல்லது சாப்வேர் மூலம் வாக்குப்பதிவு தகவல்களை எந்த இடத்திலும் இருந்தும் எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும். எனவே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் தரம், சாப்ட்வேர், வைரஸ், இயந்திரத்தின் செயல்பாடுகளுக்குள் ஊடுருவல் போன்றவை குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர் இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், மத்திய அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x