Last Updated : 10 Sep, 2016 03:49 PM

 

Published : 10 Sep 2016 03:49 PM
Last Updated : 10 Sep 2016 03:49 PM

மூன்றாம் பாலினத்தவருக்காக கழிப்பறை கட்டும் போபால் மாநகராட்சி

போபால் மாநகராட்சி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மூன்றாம் பாலினத்தவருக்காக பிரத்தியேகமான கழிப்பறைகளைக் கட்டித்தர முடிவெடுத்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய போபால் மாநகராட்சி மேயரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான அலோக் சர்மா, ''போபாலின் மத்தியப் பகுதியான மங்கல்வாராவில், மூன்றாம் பாலினத்தவருக்காக பிரத்தியேகமான கழிப்பறைகளைக் கட்டித்தர முடிவெடுத்திருக்கிறோம். இதற்கான திட்ட விளக்க அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

நவீன வசதிகளோடு கூடிய இந்தக் கழிப்பறைகளைக் கட்ட சுமார் 25 - 30 லட்சம் செலவாகும். இதைத் தொடர்ந்து நகரின் மற்ற பகுதிகளிலும் இதே போன்ற கழிப்பறைகளைக் கட்ட உள்ளோம்.

மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை இங்கு அதிகமாக உள்ளதால் இந்த யோசனை தோன்றியது. பொது இடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனிக் கழிப்பறைகள் உள்ளன. ஆனால் மூன்றாம் பாலித்தனவர்களோ அவர்களுக்கென கழிப்பறை இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். அதைச் சரிசெய்ய வேண்டும் என்று தோன்றியது.

மூன்றாம் பாலினத்தவர் அரசிடமிருந்து ஒரு பைசா கூட வாங்காமல், மாநிலத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் தன்னார்வத்துடன் பணியாற்றுகின்றனர். ஒரு சில கிராமங்களில் அவர்களின் பிரச்சாரத்துக்குப் பிறகு திறந்த வெளி மலம் கழித்தல் பிரச்சினை சரிசெய்யப்பட்டிருக்கிறது.

மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் 15 கிராமங்களுக்கு தூய்மை, துப்புரவு மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்கிறார்'' என்றார்.

பொது இடங்களில் ஆண்கள் கழிப்பறை, பெண்கள் கழிப்பறை என இரண்டு இருக்கிறது. ஆனால் மூன்றாம் பாலினத்தவர் இந்த இரண்டையுமே பயன்படுத்த முடிவதில்லை. அதனால்தான் இத்தகைய கழிப்பறைக்கு கோரிக்கைகள் பெருகின என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x