Published : 15 Feb 2014 04:47 PM
Last Updated : 15 Feb 2014 04:47 PM

நாடு முழுவதும் துடைப்பத்தால் பெருக்கும் போராட்டம்: ஆம் ஆத்மி

நாடு முழுவதும் ஊழலை எதிர்த்து துடைப்பத்தால் பெருக்கும் 10 நாள் போராட்டம் நடைபெறும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு கூட்டம் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு அதன் முக்கிய தலைவர்களான மணீஷ் சிசோடியா, யோகேந்தர் யாதவ், சஞ்சய்சிங், கோபால் ராய் மற்றும் அசுதோஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ஊழலை எதிர்த்துப் போராட்டம்

கோபால் ராய் நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் ஊழலை எதிர்த்து, துடைப்பத்தால் பெருக்கித் தள்ளும் போராட்டத்தை ஆம் ஆத்மி இன்று முதல் தொடங்குகிறது. அடுத்த பத்து நாள்கள் வரை நடைபெறவிருக்கும் இந்தப் போராட்டத்தின்போது 232 மக்களவைத் தொகுதிகளில் 2627 போராட்ட ஊர்வலங்கள் நடைபெறும். இதில், காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்து ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றவிடாமல் செய்த கூட்டு சதியை வெளிப்படுத்துவோம் என்றார்.

மருத்துவமனை, பள்ளிகளை சுத்தமாக்குதல் 24 மாநிலங்களில் துடைப்பத்தால் பெருக்கும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் 40 தொகுதிகளில் நூறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஊழலை எதிர்க்கும் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதுடன் பள்ளிகள் அல்லது மருத்துவமனைகளை ஆம் ஆத்மியின் தொண்டர்கள் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய இருக்கிறார்கள்.

கேஜ்ரிவாலுக்கு பாராட்டு

யோகேந்தர் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது: கேஜ்ரிவால் தைரியமாக முடிவு எடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை கட்சி பாராட்டி வரவேற்றுள்ளது. இனி வரவுள்ள மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து டெல்லி சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க ஆம் ஆத்மி தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.

பாஜக-காங்கிரஸுக்கு சவால் கேஜ்ரிவாலின் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலை சந்திக்கும் எனவும் பாரதிய ஜனதா கட்சியின் 32 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸின் 8 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து டெல்லியில் ஆட்சி அமைத்து காட்டட்டும் எனவும் யோகேந்தர் சவால் விடுத்தார்.

கேஜ்ரிவால் அறிவித்த விசாரணைகள் மீது கோரிக்கை

மணீஷ் சிசோடியா நிருபர்களிடம் கூறியதாவது: ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி உட்பட 6 பேர், டெல்லியின் நீர்வளத் துறையில் முந்தைய அரசு மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் மீது 5 ஊழல் வழக்குகளை ஆம் ஆத்மி அரசு ஆட்சியின்போது பதிவு செய்துள்ளோம்.

இந்த வழக்குகள் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தி விரைந்து முடிக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் துணைநிலை ஆளுநரை கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x