Published : 22 May 2017 03:26 PM
Last Updated : 22 May 2017 03:26 PM

கங்கை, யமுனை நதிகளை வாழும் நிறுவனங்களாக அறிவித்ததை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

கங்கை மற்றம் யமுனை நதிகளை வாழும் நிறுவனங்களாக அறிவித்து உத்தரவிட்ட உத்தராகண்ட் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

கங்கை நதி அசுத்தப்படுத்தப்படுவதை எதிர்த்து ஹரித்வாரைச் சேர்ந்த முகமது சலீம் என்பவர் உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த மார்ச் 20-ம் தேதி தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், கங்கை மற்றும் யமுனை ஆகிய நதிகளை வாழும் நிறுவனங்களாக அறிவித்து உத்தரவிட்டது. இதன் மூலம் அந்த நதிகளின் தூய்மையைக் காக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. மேலும் அரசு தலைமை வழக்கறிஞரும் தலைமை செயலாளரும் நதிகளின் தாய் தந்தையாக செயல்படுவார்கள் என்றும் அறிவித்தது.

ஆனால் இந்த உத்தரவின் காரணமாக பல்வேறு நிர்வாக சிக்கல்கள் வரக் கூடும் என்று மத்திய அரசு அப்போதே கருத்து கூறியிருந்த்து.

கங்கை நதி உத்தராகண்ட் மாநிலம் மட்டுமல்லாது மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாய்வதால் ஒரு மாநிலத்தின் அதிகாரிகள் மட்டும் நிர்வாகம் செய்ய முடியாது என்றும் மத்திய அரசு கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்தான் உத்தராகண்ட் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

உத்தராகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் சர்மா மற்றும் அலோக் சிங் ஆகியோர் கங்கை மற்றும் யமுனை நதிகளை புனித நதிகள் என்று குறிப்பிட்டு அதன் புனிதத் தண்மையை காக்கவே “ வாழும் நிறுவனங்களாக” அவற்றை அறிவிக்கிறோம் என்று தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x