Published : 29 May 2017 09:19 PM
Last Updated : 29 May 2017 09:19 PM

உ.பி.யில் தலித்துகளுக்கு சோப் விநியோகம்: மனதை சுத்தப்படுத்திக் கொள்ள பாஜக எந்த சோப்பை பயன்படுத்தும்?- ராகுல் காந்தி கேள்வி

''பாஜக.வினர் தங்கள் மனதை சுத்தப்படுத்திக் கொள்ள, எந்த சோப்பை பயன்படுத்துவார்கள்’’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள மெய்ன்பூர் தீனாபதி கிராமத்துக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வியாழக்கிழமை சென்றார். அந்த கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களை சந்தித்துப் பேசினார். பின்னர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்நிலையில், ஆதித்யநாத் வருகைக்கு முந்தைய நாள் கிராமத்தில் உள்ள தலித் மக்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு 2 சோப், ஷாம்பூ பாக்கெட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் உரையாற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னர், நன்கு குளித்து சுத்தமாக வரவேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாயின.

இதற்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தீண்டாமை குற்றமாகும் என்று குற்றம் சாட்டியது. இந்நிலையில் முதல்வர் ஆதித்யநாத்தை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ராகுல் கூறும்போது, ''பாஜகவினர் தங்கள் மனதில் படிந்துள்ள கீழ்த்தரமான எண்ணங்களை சுத்தப்படுத்திக் கொள்ள எந்த சோப்பை பயன்படுத்துவார்கள். தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x