Published : 28 Feb 2014 12:49 PM
Last Updated : 28 Feb 2014 12:49 PM

ஆம் ஆத்மி சராசரி அரசியல் கட்சியே: அண்ணா ஹசாரே

ஆம் ஆத்மி கட்சியும் மற்ற அரசியல் கட்சிகள் போல சராசரி அரசியல் கட்சியே என சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே விமர்சித்துள்ளார்.

மேலும், அரவிந்த் கேஜ்ரிவால் 'அதிகார பசி'யில் இருப்பதாகவும் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அண்ணா ஹசாரே அரசியல் கட்சிகளுக்கு 17 அம்ச கோட்பாடுகளை வகுத்திருந்தார்.அந்த கோட்பாடுகளை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு தனது அமைப்பு முழு ஆதரவு அளிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அண்ணா ஹசாரேவின் இந்த அறிவிக்கை பல்வேறு கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்ணாவின் 17 அம்ச கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதாக மமதா பானர்ஜி தெரிவித்திருந்தார். இதனையடுத்து மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அண்ணா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "எனது 17 அம்ச கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதாக, மம்தா பானர்ஜி மட்டுமே அறிவித்துள்ளார். அரவிந்த் கேஜ்ரிவால் இதுவரை பதில் தெரிவிக்கவில்லை. இதன் மூலம், கேஜ்ரிவால் மக்களைப் பற்றி சிந்திப்பதை விட அதிகாரத்தைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறார் என்பது தெரிகிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத கட்சி எப்படி தேசத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை அளிக்க முடியும். ஆம் ஆத்மி கட்சிக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை." என்றார்.

மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தல் தேசத்திற்கு திருப்புமுனையாக அமையும் என்பதால், எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் ஆதரவு அளிக்கப்போவதில்லை என அண்ணா ஹசாரே கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x