Last Updated : 26 Mar, 2014 12:00 AM

 

Published : 26 Mar 2014 12:00 AM
Last Updated : 26 Mar 2014 12:00 AM

குறிப்பிட்ட அரசியல் தலைவரை இந்தியன் முஜாகிதீன்கள் குறிவைக்கவில்லை

ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் தீவிர வாதிகள் குறிப்பிட்ட எந்த அரசியல் தலைவரையும் குறிவைக்க வில்லை என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இந்தியன் முஜாகிதீன் முக்கிய கமாண்டர் வகாஸ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை அவர்கள் குறிவைத்தனர் என்று அப்போது தகவல் வெளியானது.

ஆனால் டெல்லி போலீஸார் இதனை மறுத்துள்ளனர். இது தொடர்பாக பெயர் தெரி விக்க விரும்பாத டெல்லி போலீஸ் சிறப்புப்படை பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ராஜஸ்தானில் பாரத்பூரில் 2011-ம் ஆண்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைக்கு பழி வாங்கும் நோக்கில்தான் அம்மாநிலத்தில் இந்தியன் முஜாகிதீன்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். முக்கியமாக பாரத்பூரில் உள்ள கங்கா கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ரக்சா பந்தன் விழா வின் போது குண்டு வைக்க சதி செய்துள்ளனர். குறிப்பிட்ட எந்த அரசியல் தலைவரையும் அவர்கள் குறிவைக்கவில்லை. பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு ஏற்ப இவர்கள் செயல்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

இதனிடையே, தீவிரவாதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய் யப்பட்டுள்ள இரு இன்ஜினீயரிங் மாணவர்களின் பெற்றோர், தங்கள் மகன் அப்பாவி என்று வாதிடுகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள முகமது மகரூப்பின் தந்தை பரூக் கூறுகையில், அதிகாலை நேரத்தில் ஏராளமான போலீஸார் எங்கள் வீட்டுக்குள் புகுந்து சோதனையிட்டனர். அதில் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் எனது மகனை பிடித்துச் சென்றனர். அவனது லேப்டாப்பை மட்டும் எடுத்துச் சென்றனர்.

சமூக வலைத்தளம் மூலம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளான் என்று போலீஸார் பின்னர் தகவல் தெரிவித்தனர் என்றார்.

தீவிரவாதத்துக்கு எதிரான வெற்றி

மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் டெல்லியில் நேற்று கூறியது: இந்தியாவில் தேடப்பட்டு வந்த மிகமுக்கியமான தீவிரவாதி அக்தர். அவரை தில்லி போலீஸார் இந்திய நேபாள எல்லையில் கைது செய்துள்ளனர். இது தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி. அக்தரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் அந்த தீவிரவாதிகள் இந்தியாவில் எங்கெல்லாம் கிளை விரித்துள்ளனர். அவர்களின் சதித்திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். தீவிரவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையின் பயன் கள்தான் இந்த கைது நடவடிக்கைகள் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x