Published : 04 Jun 2016 08:50 AM
Last Updated : 04 Jun 2016 08:50 AM
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் அஜித் ஜோகி விலகி உள்ளார்.
காங்கிரஸ் கட்சி மேலிடம் தங்கள் குறைகளை கேட்பதில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில்லை என்று கட்சி மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் மூத்த தலைவர் ஹிமந்த் பிஸ்வா சர்மா சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகினார். அசாம் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பாஜக கைப்பற்றியதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து உத்தராகண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணாவும் கட்சி மீதான அதிருப்தியால் விலகினார்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் ஜோகி கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘‘காங்கிரஸை பற்றியோ அல்லது சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல் பற்றியோ நான் கருத்து தெரிவிக்க போவதில்லை. ஆனால், அவர்களுக்கு ‘குட் நைட்’ சொல்லி வாழ்த்துகிறேன். நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா காலத்தில் இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை. இப்போது இருப்பது வேறு மாதிரியான காங்கிரஸ்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் 6-ம் தேதி சொந்த தொகுதியான மார்வாஹியில் உள்ள கோட்மி நகரில் தனது ஆதரவாளர்களை சந்தித்து அஜித் ஜோகி ஆலோசனை நடத்த உள்ளார். அந்த கூட்டத்தில் புதிய கட்சிக்கான பெயர், கொடி, சின்னம் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுப் பேன். எனது தலைமையிலான புதிய கட்சி ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகளை எதிர்த்து போராடும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT