Published : 21 Sep 2013 02:33 PM
Last Updated : 21 Sep 2013 02:33 PM

முசாபர்நகர் கலவரம்: பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கைது

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் கலவரத்தைத் தூண்டும் வகையில், போலி வீடியோவை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டில், அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் இன்று கைது செய்யப்பட்டார்.

சங்கீத் சோமை அவரது தொகுதியான சர்தானாவில் கைது செய்ததாகவும், அப்போது அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் உத்தரப் பிரதேச காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், சங்கீத் சோம் கைது செய்யப்படவில்லை என்றும், அவராகவே சரணடைந்தார் என்றும் பாஜகவினர் தெரிவித்தனர்.

இந்தக் கைது நடவடிக்கையால், பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால், பதற்றத்தைத் தணிக்கும் வகையில் சர்தானாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, முசாபர்நகரில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக, பாஜகவின் மற்றொரு எம்.எல்.ஏ. சுரேஷ் ராணாவை வெள்ளிக்கிழமை லக்னோ போலீஸார் கைது செய்தது. அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இதனிடையே, முசாபநகர் கலவரத்தில் தொடர்புடையதாக, பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. நூர் சலீம் ராணா கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டமன்றக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டவுடன், கைது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது கவனத்துக்குரியது.

முசாபர்நகரில் கடந்த 7-ம் தேதி நடந்த கலவரத்தில் 48 பேர் உயிரிழந்ததும், 43 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x