Published : 24 Jan 2014 12:03 PM
Last Updated : 24 Jan 2014 12:03 PM

ஜம்மு போலி என்கவுன்டர் வழக்கு முடிந்ததாக ராணுவம் அறிவிப்பு: ஒமர் அப்துல்லா எதிர்ப்பு

ஜம்மு போலி என்கவுன்டர் வழக்கு முடிவு பெற்றதாக ராணுவ விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளதற்கு அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்ரிபால் பகுதியில் கடந்த 2000-ஆம் ராஷ்டிரிய ரைபில்ஸ் படையினரால் அப்பகுதியைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் 2000-ஆம் ஆண்டு சிட்சிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்களால் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பத்ரிபால் கிராமத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் தான் சீக்கியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என கூறப்பட்டது.

ஆனால் பின்நாளில் நடைபெற்ற விசாரணையில், பலியானவர்கள் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் என தெரியவந்தது.

இந்நிலையில், 14 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டும், போதுமான சாட்சியங்கள் கிடைக்கவில்லை என்று கூறி பத்ரிபால் என்கவுன்டர் வழக்கை முடித்துவிட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.

ராணுவத்தின் இந்த அறிவிப்புக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் வலைப்பக்கத்தில், ராணுவத்தின் முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேற்கொண்டு சட்ட ஆலோசனைகளை பெற இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x