Published : 03 Jan 2016 10:04 AM
Last Updated : 03 Jan 2016 10:04 AM
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாடு திரும்பியதும் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருப்பதாகவும் அங்கு சில நாட்கள் தங்கி இருக்கப் போவதாகவும் டிசம்பர் 27-ம் தேதி ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வரும் 8-ம் தேதிக்குப் பிறகு ராகுல் நாடு திரும்புவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ஒரு நிர்வாகி கூறும்போது, “ராகுல் நாடு திரும்பியதும் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும். அதில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். தலைமைப் பொறுப்பை ஏற்க அவர் தயாராக உள்ளார். இப்போது தலைவராக அவர் விரும்பவில்லை என்று கூறுவது தவறு. மேலும் அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை அவர் காத்திருப்பார் என்று கூறுவதும் தவறு” என்றார்.
எனினும், கட்சியின் நிறுவன நாள் நிகழ்ச்சியின்போது இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி, “அவரிடமே கேளுங்கள்” என்றார்.
கடந்த 1998-ம் ஆண்டு மே மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற சோனியா காந்தி, இன்று வரை அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார். இதன்மூலம் 129 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்சியின் தலைவராக நீண்டகாலம் பதவி வகித்தவர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. ராகுல் காந்தி கடந்த 2013-ம் ஆண்டு கட்சியின் துணைத்தலைவரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT