Last Updated : 30 Mar, 2014 02:34 PM

 

Published : 30 Mar 2014 02:34 PM
Last Updated : 30 Mar 2014 02:34 PM

யார் இந்த இம்ரான் மசூத்?

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக்குவேன் என்று பேசியதால் கைது செய்யப்பட்ட இம்ரான் மசூத் (40), உத்தரப்பிரதேச மாநிலம், சஹரான்பூரைச் சேர்ந்தவர்.

அந்த மாவட்டத்தின் பெஹித் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் பதவியை இழந்த முதல் எம்.பி. (மாநிலங்களவை உறுப்பினர்) என்ற பெயரை பெற்ற காங்கிரஸ் தலைவர் ரஷீத் மசூத்தின் சகோதரர் மகன் இவர். என்றாலும் ரஷீத் மசூதுக்கு நேர்மாறான கொள்கைகளை கொண்டவர் இம்ரான் மசூத்.

சிறந்த சமூக சேவகராகக் கருதப்படும் இம்ரான் மசூதின் குடும்பத்திற்கு முஸ்லிம்கள் அதிகம் வாழும் சஹரான்பூர் மாவட்டத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. இதன் மூலம் பெஹித் தொகுதியில் மசூத் சுயேச்சையாகப் போட்டியிட்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை வென்றுள்ளார்.

இம்ரான் சில ஆண்டுகளுக்கு முன் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். மக்களவை தேர்தலில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்தபோது கட்சி அதை ஏற்றுக்கொண்டது.

இதனிடையே சிறையில் தள்ளப்பட்ட ரஷீத் மசூத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அவர் பிறகு ஜாமீனில் விடுதலையானபோது, அவரை சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் நேரில் சந்தித்தார். ரஷீத் மசூத்தின் மகனான ஷாஜன் மசூதை சஹரான்பூரின் வேட்பாளராக்கினார் முலாயம். இதனால் அதிருப்தி அடைந்த இம்ரான் மசூத் சமாஜ்வாதி கட்சியை விட்டு விலகி காங்கிர ஸில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் சஹரான்பூரில் போட்டி யிடும் இம்ரான் தனது உறவினரை எதிர்த்தே போட்டியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x