Published : 31 Mar 2017 10:40 AM
Last Updated : 31 Mar 2017 10:40 AM
கர்நாடகாவில் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த ராஜ நாகம் ஒன்று பாட்டில் தண்ணீரைக் குடிக்கும் விநோத வீடியோ வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததால், ஆறு, ஏரி, அணை, குளங்கள் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு கிடப்பதோடு விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. வனப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளும் வறண்டுள்ளதால் விலங்குகளும் பறவைகளும் வேறு இடங்களுக்கு இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கைகா டவுன் உள்ளது. கடந்த வாரம் 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் கைகா டவுனுக்குள் நுழைந்தது. இதை வனத்துறை அதிகாரி சி.என்.நாயக்கா மற்றும் பாம்பு பிடிக்கும் ஊழியர் ராகவேந்திரா ஆகியோர் பிடித்தனர்.
மிகவும் களைப்புடன் காணப்பட்ட அந்த பாம்புக்கு வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடிக்க கொடுத்தார் சி.என்.நாயக்கா. அப்போது, வனத்துறை ஊழியர்கள் பாம்பின் வாலை பிடித்துக்கொள்ள, தலையை திடீரென உயர்த்தாமல் இருக்க இன்னொருவர் கம்பியால் பிடித்துக்கொண்டார். இதனால் நீண்ட நேரம் ராஜநாகம் தண்ணீரை குடித்தது காண்போரை வியக்க வைத்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து சி.என்.நாயக்கா கூறும்போது, “பொதுவாக ராஜநாகம் தனது அருகே ஏதாவது வந்தாலே சீறிக்கொண்டு படம் எடுக்கும். ஆனால் இந்த பாம்பு தண்ணீர் தாகம் காரணமாக படம் எடுக்காமல் சோர்வாக இருந்தது. கோடை காலத்தில் மலைப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டுள்ளதால் பாம்புகள் குடிநீரைத் தேடி ஊருக்குள் வருகின்றன. இதேபோல விலங்குகளும், பறவைகளும் நீருள்ள இடத்தைத் தேடி இடம் பெயர்கின்றன. இதைத் தடுப்பதற்காக, வனப்பகுதிக்குள் உள்ள நீர் நிலைகளை நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT