Last Updated : 24 Apr, 2017 07:11 AM

 

Published : 24 Apr 2017 07:11 AM
Last Updated : 24 Apr 2017 07:11 AM

பெண்களால் நிம்மதியாக வாழ முடியவில்லையே ஏன்? - காதல் செய்ய யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

‘‘இந்த நாட்டில் பெண்களால் நிம் மதியாக வாழ முடியவில்லையே ஏன்? காதல் செய்ய யாரையும் இங்குக் கட்டாயப்படுத்த முடியாது’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலத் தில், காதலிக்க மறுத்த 16 வயது மகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞர் ஒருவர் மீது அவரது தந்தை போலீஸில் புகார் செய்தார். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் இளைஞரை விடுவித்தது. அதன்பின்னரும் அந்தப் பெண்ணை ஈவ் டீசிங் செய்து துன்புறுத்தி உள்ளார். அதனால் மனம் உடைந்த இளம் பெண், கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள்.

இதையடுத்து அந்த இளைஞர் மீது பெண்ணின் தந்தை மீண்டும் புகார் அளித்தார். இந்த வழக்கிலும் அவரை விசாரணை நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு விடுவித்தது. அதை எதிர்த்து இமாச்சல் உயர் நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மருத்துவமனையில் பெண் அளித்த வாக்குமூலம் மற்றும் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இளைஞர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கார், எம்.எம்.சந்தானகவுடர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘இந்த நாட்டில் பெண்களால் நிம்மதியாக வாழ முடியவில்லையே ஏன்?’’ என்று கோபமாக கேள்வி எழுப்பினர். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவதைக் குறிப்பிட்டு நீதிபதிகள் இந்தக் கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள் கூறும் போது, ‘‘ஒரு பெண்ணைக் காதலிக்கச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்த முடியாது. யாரை காதலிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் தனிப்பட்ட உரிமை பெண்ணுக்கு உண்டு. ஒருவரை காதலிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை பெண்ணுக்குண்டு. இந்த கருத்தை சம்பந்தப்பட்ட இளைஞர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொள்ளும் சூழலை நீங்கள் (இளைஞர்) உருவாக்கித் தந்துள்ளீர்கள்’’ என்று கருத்து தெரிவித்தனர். பின்னர் தீர்ப்பைத் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x