Published : 03 Feb 2014 09:39 AM
Last Updated : 03 Feb 2014 09:39 AM

மத்தியில் மூன்றாம் அணி அமைய பாடுபடுவோம்: ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் பேட்டி

மூன்றாவது அணி அமைய ஐக்கிய ஜனதா தளம் கட்சி தீவிரமாக பாடுபடும் என்று தெரிவித்தார் அந்த கட்சியின் தலைவர் சரத் யாதவ். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதை அவர் தெரிவித்தார்.

நரேந்திர மோடிக்கு பாஜக உயரிய அங்கீகாரம் கொடுப்பது பிடிக்காமல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து கடந்த ஆண்டு வெளியேறியது ஐக்கிய ஜனதா தளம். இந்நிலையில், மூன்றாவது அணி அமைப்பது பற்றி சரத் யாதவ் கூறியதாவது:

காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளுக்குள், மாநில நிலையில் உள்ள முரண்பாடுகள் அவை ஓரணியில் திரள தடை யாக இருக்கின்றன என்பது உண்மை தான்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீதான வெறுப்பு காரணமாக, எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்ட நிலையில் அவற்றை உடைப்பது பாஜகதான்.

அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் எங்கள் கட்சி கூட்டணி வைக்க வாய்ப்பே கிடையாது. தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் கைகோக் கும் என்று வெளியாகும் வதந்தி களை நம்ப வேண்டாம். கொள்கை அடிப்படையிலான வேறுபாடு களால்தான் அந்த கட்சியை விட்டு பிரிந்தோம். எனவே, மீண்டும் அந்த கட்சியுடன் உறவு ஏற்படாது.

தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது அணி அமைவது சாத்தியமே. இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி முக்கிய பங்கு ஆற்றும். கடந்த காலங்களில் கூட்டணி ஆட்சி அமைக்க கட்சிகள் கைகோத்துள்ளன.

சமாஜவாதி கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஏற்கெனவே அணி சேர்ந்துள்ளன. பிற கட்சிகளின் ஆதரவை திரட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

காங்கிரஸ், பா.ஜ.க.வை கழித்தாலும் நாட்டில் மிகப் பெரிய அரசியல் பலம் உள்ளது. அது பற்றி சமுதாய அளவில் விவாதம் தேவை. காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத பிற கட்சிகளின் வலிமை குறைந்ததல்ல. நாடு நல்ல பாதையில் செல்லவேண்டும் என்றால் மூன்றாவது அணி அவசியம்.

மாநில நிலையில் உள்ள முரண்பாடுகளால் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளும் மம்தா கட்சியும் கைகோக்க முடியாது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஒன்று சேர முடியாது, தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் உறவாட முடியாது.

இந்த கட்சிகளுக்குள் முரண்பாடு இருந்தாலும் முக்கிய பிரச்சினைகளில் இவற்றால் இணக்கம் காண முடிகிறது என்பதை 65 ஆண்டு கால அனுபவம் காட்டுகிறது.

விலை உயர்வு போன்ற பிரச்சினைகளில் பாரத் பந்த் நடத்தினால் அதே கட்சிகள் ஒன்று கூடுகின்றன. இதற்கெல்லாம் வழி காண முயற்சிக்கிறோம்.

முரண்பாடுகள் இருந்த போதிலும் 1977ல் ஜனதா கட்சி ஆட்சி அமைந்தது. 1989ல் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசு அமைந்தது. 1996ல் தேவே கவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் தலைமையில் மூன்றாவது முன்னணி அரசுகள் அமைந்தன. இந்த அரசுகள் நீடிப்பதில் பிரச்சினை இருந்தாலும் நல்ல பணி ஆற்றினோம்.

நாட்டில் மோடி அலை வீசவில்லை. சமூகத்தை பிரித்தாள் வதில் பாஜக நம்பிக்கை கொண்டது. காங்கிரஸ் ஆட்சி மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன. இரு கட்சிகளுமே நாட்டின் நலனில் அக்கறை இல்லாதவை என்றார் சரத் யாதவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x