Last Updated : 17 Jan, 2014 12:00 AM

 

Published : 17 Jan 2014 12:00 AM
Last Updated : 17 Jan 2014 12:00 AM

பாகிஸ்தான் பெண்ணுடன் காதலா?- அமைச்சர் சசி தரூர் மறுப்பு

பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளரை காதலிப்பதாக வெளியான தகவலை மத்திய மனிதவளத்துறை இணை அமைச்சர் சசி தரூர் மறுத்துள்ளார்.

இது குறித்து சசி தரூர், அவரது மனைவி சுனந்தா புஷ்கர் ஆகியோர் இணைந்து ட்விட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் நடைபெறாத ஒரு சம்பவம் குறித்து எங்கள் இணையதள கணக்கில் வந்துள்ள சட்டவிரோத சில ட்வீட்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக் கிறோம். சுனந்தாவுக்கு உடல் நலம் சரியில்லை. இந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஊடகங்கள் தலையிடாமல் இருந்தால் நாங்கள் மிகவும் நன்றிக் கடன்பட்டவர்களாக இருப்போம் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு ஒருநாள் முன்பு, சசிதரூரின் டிவிட்டர் கணக்கில், அவருக்கும் பாகிஸ்தானிய பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் என்பவருக்கும் நடந்த தனிப்பட்ட உரையாடல் வெளியானது. இதை படித்த சுனந்தா பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தார்.

இதற்கு சுனந்தா தனது கருத்தை பதிவு செய்யும்போது, “பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளியான மெஹர் எனது கணவரை கவர்வதற்காக செலுத்தும் பார்வை சரியில்லை. இவரைப் பற்றி இந்தியாவின் புலனாய்வு அமைப்பான “ரா”விடம் புகார் கூறவிருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து சுனந்தா பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், தனது 57 வயது கணவர் 45 வயது பாகிஸ்தானிய பெண்ணுடன் காதல் புரிவதாகப் புகார் கூறியிருந்தார். மேலும் மணமான ஒருவரின் வாழ்க்கையில் தலையிடுவது சரியல்ல என்று மெஹருக்கு தாம் ட்வீட் அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே மெஹர் தனது ட்வீட்டில், ‘என்னை ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் என திருமதி தரூர் எப்படி சொல்லலாம்? இந்தியாவிலோ, பாகிஸ்தானிலோ அப்படியென்ன நான் செய்துவிட்டேன்? இதற்காக, சுனந்தா மீது மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன்” என மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், சசிதரூரின் ட்விட்டர் கணக்கை யாரோ ‘ஹேக்’ செய்ய முயற்சித்ததாகக் கூறி அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். எனினும் இந்த முறைகேடு குறித்து சசி தரூர் போலீஸில் புகார் செய்யாதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

காஷ்மீர் பெண்ணான சுனந்தா புஷ்கர் ஏற்கெனவே மணமாகி கணவரை விட்டுப் பிரிந்தவர். இவரை காதல் திருமணம் செய்த சசிதரூரும் ஏற்கெனவே 2 முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x