Published : 10 Jun 2016 04:24 PM
Last Updated : 10 Jun 2016 04:24 PM
2 ஆண்டுகளுக்கு முன்பு புதுடெல்லி ரயில் நிலையம் அருகே டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 52 வயது பெண்மணி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கூடுதல் அமர்வு நீதிபதி ரமேஷ் குமார், மகேந்தர் என்கிற கஞ்சா (25), மொகமது ராஜா (25), ராஜு (23), அர்ஜுன் (21), மற்றும் ராஜு சக்கா (30) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேலும், குற்றவாளிகள் ராஜு, ராஜு சக்கா ஆகியோருக்கு தலா ரூ.83,000, மகேந்தர் மற்றும் மொகமது ராஜா ஆகியோருக்கு தலா ரூ.93,000, அர்ஜுனுக்கு ரூ.103,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6-வது நபர் ஷியாம் லால் (56) கடந்த பிப்ரவரி மாதம் இறந்து போனார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட 3 சிறார்கள் மீதான வழக்கு சிறார் நீதி வாரியத்தில் நடைபெற்று வருகிறது.
அரசு தரப்பு வழக்கறிஞர் அடுல் ஸ்ரீவஸ்தவா குற்றவாளிகளுக்கு வாழ்நாள் முழுதும் சிறையில் கழிக்கும் முழு ஆயுள் தண்டனை அளிக்க பரிந்துரை மேற்கொண்டார். குற்றவாளிகள் சார்பாக சட்ட உதவி வழங்கிய வழக்கறிஞர் தினேஷ் சர்மா, குற்றவாளிகள் ஏழ்மையானவர்கள் என்பதால் கோர்ட் தண்டனையில் கடுமை காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னணி விவரம்:
கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி, டென்மார்க்கிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 52 வயது பெண்ணை 5 பேர் சேர்ந்து கத்தி முனையில் மிரட்டிக் கடத்தி, கூட்டு பலாத்காரம் செய்து, அவரிடமிருந்த பொருட்களைப் பறித்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு, டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ் குமார், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும், சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களையும் செய்துள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகள் மகேந்திரா (எ) கஞ்சா(27), ராஜா (23), ராஜு (24), ராஜு சக்கா (23), அர்ஜுன் (22) ஆகிய ஐந்து பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த 5 பேர் தவிர, ஷ்யாம் லால் என்ற 56 வயது நபர் மீதும் இதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவர் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர், ஷ்யாம் லாலின் ஆண்மைத் தன்மை குறித்து மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி யிருந்தார். ஆனால், அம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
எனினும், வழக்கு விசாரணைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. எனவே, ஐவரும் குற்றவாளிகள் என்ற தீர்ப்பை வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார். இவ்வழக்கில் மேலும் மூவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் சிறார்கள் என்பதால், சிறார் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 5 குற்றவாளிகளுக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT