Published : 06 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Feb 2014 12:00 AM
இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியை விட என் எருமைகள் தற்போது அதிகப் புகழ்பெற்று விட்டன என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் முகமது ஆஸம் கான் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:
தற்போதைய நிலையில் விக்டோரியா மகாராணியை விட என் எருமைகள் புகழ்பெற்று விட்டன. என் எருமைகளால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
எந்த தொலைக்காட்சி செய்திச் சேனலைத் திருப்பினாலும் நீங்கள் என் புகைப்படத்தையும், எருமைகள் சாணமிட்டுத் திரிவதையும் காண முடியும் என்றார்.
ஆஸம் கானின் பண்ணை வீட்டிலிருந்து கடந்த 1-ம் தேதி 7 எருமைகள் திருடப்பட்டன. இவற்றைத் தேடும் பணியில் அதிக போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மோப்ப நாய்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பல்வேறு போலீஸ் துறை அதிகாரிகள் எருமைகளைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மிருக வதைக் கூடங்கள், இறைச்சிக் கூடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இரு நாட்களில் அந்த எருமைகள் மீட்கப்பட்ட போதும், காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும், இரு காவலர்களும் இச்சம்பவத்தில் கடமை தவறியதாகக் கூறி தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT