Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM

ம.பி.யில் 70%, மிசோரத்தில் 80% வாக்குப் பதிவு

மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மத்தியப் பிரதேசத்தில் 70 சதவீத வாக்குகளும், மிசோரத்தில் 80 சதவீத வாக்குகளும் பதிவாயின.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு குறித்து மத்தியப் பிரதேச கூடுதல் முதன்மை தேர்தல் அதிகாரி வி.எல்.காந்தராவ் நிருபர்களிடம் கூறுகையில், “மாநிலத்தில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். 12 சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது" என்றார்.

இம்மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. இத்தேர்தலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்பட 2,583 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். புத்னி, விதிஷா ஆகிய இரு தொகுதிகளில் சவுகான் போட்டியிடுகிறார். இம்மாநிலத்தில் 4 கோடியே 64 லட்சத்து 57,724 வாக்காளர்கள் உள்ளனர். இதையொட்டி 51 மாவட்டங்களிலும் 53,896 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இம்மாநிலத்தில் 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் காங்கிரஸும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

மிசோரம்

40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் நேற்று 80 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் அமைதியாக நடைபெற்றது.

மாநில முதன்மை தேர்தல் அதிகாரி அஸ்வினி குமார் கூறுகையில், “மாநிலத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது. 80 சதவீத வாக்காளர்கள், அதாவது 6.9 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். 3 தொகுதிகளில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். தொலைதூரப் பகுதிகளில் இருந்து விவரங்கள் வரப்பெற்ற பிறகு வாக்குப் பதிவு சதவீதம் மேலும் உயரும். தேர்தல் முழுவதும் அமைதியாக நடைபெற்றது” என்றார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில முதல்வர் லால் தன்ஹாலா, அவரது மனைவி லால் ரிலியாணி ஆகியோர் ஜர்காட் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய லால் தன்ஹாலா, “மாநிலத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x