Published : 27 Oct 2013 11:51 PM
Last Updated : 27 Oct 2013 11:51 PM

டெல்லியில் காங்கிரஸ் வெற்றி உறுதி: ராகுல் நம்பிக்கை

டெல்லி மாநில சட்டப்பேரவையை காங்கிரஸ் நான்காவது முறையாக வெல்வது உறுதி என அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.



டெல்லியின் வடக்குப் பகுதியில் உள்ள மங்கோல்புரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு பேசினார்.

டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆட்சியின் சாதனைகளை பாராட்டி பேசிய ராகுல் காந்தி மேலும் பேசும்போது, "ஷீலா தீக்ஷித் டெல்லியில் பெரும் மாற்றத்தை உருவாக்கி உள்ளார். அதற்கு உதாரணம் மெட்ரோ ரயில். பிற மாநிலங்களில் இருந்து டெல்லியில் குடியேறியவர்களை முன்னேற்றுவதுதான் காங்கிரஸின் முக்கியப் பணி. அங்கீகரிக்கப்படாத 1,500 காலனிகளில் வாழும் ஏழைகளுக்கு நாம் உதவி இருக்கிறோம்.

டெல்லியில் உலகத் தரம் வாய்ந்த ஒரு விமான நிலையம் அமைத்துள்ளோம். இங்குள்ள நகரப் போக்குவரத்தில் அரசு ஒரு புரட்சியை உருவாக்கி உள்ளது. ஐந்து பல்கலைகழகங்களில் 53,000 புதிய இடங்களை உருவாக்கி டெல்லியை ஒரு கல்வி மையமாக்கி இருக்கிறோம். இதனால், டெல்லி இளைஞர்கள் அதிகமாக பயன் அடைந்துள்ளனர்.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு நிதி எங்கிருந்து வரும்? என எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர். ஏழைகளின் உரிமையான அதற்கு நாம் எங்கிருந்தாவது கொண்டு வருவோம் என பதில் அளிக்கிறோம்.

உங்கள் அனைவரையும் முன்னேற்றுவதுதான் எங்கள் குறிக்கோள். கடைசி வரிசையில் இருப்பவர்களும் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டு தம் உரிமைகளை எழுப்ப வேண்டும்" என்றார் ராகுல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x