Published : 05 Jun 2017 03:12 PM
Last Updated : 05 Jun 2017 03:12 PM
புதிய சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஒருங்கிணைந்த மறைமுக வரித்திட்டத்தில் சினிமா மீது 28% வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் அளிக்கும் விதமாக அருண் ஜேட்லி, ‘நாங்கள் ஒவ்வொரு பிரதிநிதித்துவத்தையும் அலசி வருகிறோம், ஆனால் ஊடகங்களில் பிரச்சாரம் செய்து அரசுக்கு அழுத்தம் தரும் முயற்சித் திருவினையாகாது. எங்கள் கைகளை முறுக்க முடியாது” என்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
பொழுதுபோக்கு வரி 29.1%லிருந்து ஜிஎஸ்டி வரியில் 28% ஆகக் குறைகிறது என்றார் ஜேட்லி.
கமல்ஹாசன் ஜிஎஸ்டி வரி குறித்து கூறிய போது, “இது கிழக்கிந்திய கம்பெனி அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது சினிமாத்துறைக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய தண்டனையாகும்.
சினிமா என் வாழ்க்கை, ஆனால் இதை சிகரெட், மது, புகையிலை உள்ளிட்டவற்றுடன் சேர்த்தது என்னைக் காயப்படுத்துகிறது” என்றும், பாலிவுட் சினிமா மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுவது, ஆனால் பிராந்திய சினிமாக்கள் பல சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. நாம் இதில் ஒற்றைக்கலாச்சாரத்தை திணிக்க முடியாது. இவ்வளவு பெரிய வரி விகிதத்தை திரைப்படத் துறை தாங்காது, அது வீழ்ந்து விடும், என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாகவும் திரைப்படத்துறையினர் ஜிஎஸ்டி சினிமா வரி மீது விமர்சனங்களை வைப்பதையும் எதிர்த்தே, ‘ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் பயனளிக்காது’ என்று அருண் ஜேட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT