Published : 24 Oct 2014 03:34 PM
Last Updated : 24 Oct 2014 03:34 PM

அமைதிக்காக கவுரவத்தை விட்டுக்கொடுக்க முடியாது: சீன எல்லைப் பிரச்சினையில் ராஜ்நாத் சிங் கருத்து

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு அமைதி ஏற்பட வேண்டும், ஆனால் அந்த அமைதிக்காக தேசத்தின் கவுரவத்தை விட்டுக்கொடுக்க முடியாது என மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தோ - திபெத் எல்லையோர காவற்படை (ஐ.டி.பி.டி)-யின் 53-வது எழுச்சி தினத்தையொட்டி வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "கவுரவமே மனித குலத்தின் தலையாய இலக்கு. எனவே சீன எல்லைப் பிரச்சினையிலும் கவுரமான அமைதியே வேண்டும். அமைதியை ஏற்படுத்த கவுரவத்தை விட்டுக்கொடுக்க முடியாது. இந்தியா வந்த சீன அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடியும், எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றே கூறியுள்ளார்" என்றார்.

எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது, அருணாசலப்பிரதேசத்தில் மக்மோகன் எல்லைக்கோடு நெடுகிலும் சாலை அமைக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது ஆகியனவற்றை குறிப்பிட்டு ராஜ்நாத் இவ்வாறு பேசினார்.

மக்மோகன் எல்லைக்கோடு பகுதியில் சாலை அமைப்பது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், "இத்திட்டம் தொடர்பான அறிவிப்பை நாங்கள் உறுதிசெய்ய வேண்டியுள்ளது. சீனா – இந்தியா இடையிலான எல்லைப் பிரச்சினை காலனி ஆதிக்க காலத்தில் விட்டுச் செல்லப்பட்டது. இந்தப் பிரச்சினையை நாங்கள் உரிய முறையில் தீர்க்க வேண்டியுள்ளது. எல்லைப் பிரச்சினையில் இறுதித் தீர்வுக்கு வருவதற்கு முன், தற்போதுள்ள நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில் இந்தியா எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாது என நம்புகிறோம்" என கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு அமைதி ஏற்பட வேண்டும், ஆனால் அந்த அமைதிக்காக தேசத்தின் கவுரவத்தை விட்டுக்கொடுக்க முடியாது என மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அத்துமீறலை நிறுத்துக:

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் நிலையில், "எல்லையில் அத்துமீறுவதை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்திக் கொள்ள வேண்டும். தீபாவளிக்கு முந்தைய நாள்கூட பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. பண்டிகை நாளிலும் தாக்குதல் நடத்துகிறது பாகிஸ்தான். இத்தகைய போக்கை அந்நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது இந்திய ராணுவம் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. எல்லாப் பிரச்சினைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம். ஆனால், அண்மையில் பாகிஸ்தான் எல்லப் பிரச்சினையில் ஐ.நா. உதவியை நாடியிருக்கிறது. இது ஏற்புடையதல்ல. இந்தியா தனது கவுரவத்தை விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்ளாது" என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, "ஒவ்வொரு முறை எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தும்போது, சீனா அத்துமீறி இந்தியாவுக்குள் நுழையும்போதும் ஆத்திரம் ஏற்படுகிறது. அதேவேளையில் வேதனையும் ஏற்படுகிறது. சீனாவாக இருக்கட்டும், பாகிஸ்தானாக இருக்கட்டும் அண்டை நாடுகளுடன் அமைதி நிலவ வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. இந்த உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்பதே எங்கள் கொள்கை. இந்த நம்பிக்கையை நாங்கள் உலகுக்கும் எடுத்துரைத்துவிட்டோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x