Last Updated : 20 Jan, 2016 07:19 PM

 

Published : 20 Jan 2016 07:19 PM
Last Updated : 20 Jan 2016 07:19 PM

சல்மான் கான் வழக்கில்1 வாரத்தில் மேல்முறையீடு: மகாராஷ்டிர அதிகாரி தகவல்

2002-ம் ஆண்டு கார் விபத்து வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கான் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு ஒரு வாரத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிர அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அதிகாரி ஒருவர் புதன் கிழமையன்று கூறும்போது, “சல்மான் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான உத்தரவு அரசு வழக்கறிஞர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இன்னும் ஒரு வாரத்துக்குள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்” என்றார்.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதன் மூலம் ஒருவர் உயிரிழக்கவும், 4 பேர் பலத்த காயமடையவும் காரணமாக இருந்தார் எனக் கூறி தொடரப் பட்ட வழக்கில் சல்மான் கானுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், சல்மான் கானுக்கு எதிரான குற்றச்சாட்டுளை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதாக கூறி கடந்த டிசம்பர் 10-ம் தேதி அவரை விடுதலை செய்தது.

சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஏற்கெனவே அறிவித்தார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விரும்பினால் 90 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x