

லிபியாவில் கடத்தப்பட்ட மருத்துவர் உட்பட 6 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ராமமூர்த்தி கோசனம். இவர் சமீபத்தில், லிபியாவில் கடத்தப்பட்டார்.
இந்த நிலையில் கடத்தப்பட்ட இந்திய மருத்துவர் ராமமூர்த்தி கோசனம் விடுவிக்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை மாலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதுகுறித்து சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடத்தப்பட்ட இந்திய மருத்துவர் ராமமூர்த்தி கோசனம் தற்போது விடுதலைச் செய்யப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் உள்ளார். ராமமூர்த்தி புல்லட் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். விரைவில் ராமமூர்த்தி இந்தியா அழைத்து வரப்பட இருக்கிறார்.
ராமமூர்த்தி உட்பட கடத்தப்பட்ட 6 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். லிபியாவிலுள்ள இந்திய அதிகாரிகளுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.