ரயில்வே வாங்கும் 100 கிராம் தயிரின் விலை ரூ.972; எண்ணெய் 1 லி. ரூ.1241: ஆர்டிஐ மூலம் அம்பலம்

ரயில்வே வாங்கும் 100 கிராம் தயிரின் விலை ரூ.972; எண்ணெய் 1 லி. ரூ.1241: ஆர்டிஐ மூலம் அம்பலம்
Updated on
2 min read

மத்திய ரயில்வே சமையல் பிரிவு சுத்திகரிக்கப்பட்ட 1 லிட்டர் சமையல் எண்ணெயை ரூ.1241-க்கும், 100 கிராம் தயிரை ரூ.972க்கும் வாங்கியுள்ளது.

இதுபோல ஏராளமான சமையல் பொருட்கள் அவற்றின் உச்சகட்ட விலையை விடப் பல மடங்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான விவரங்கள் சமூக ஆர்வலர் ஒருவர் தொடுத்த ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது.

அஜய் போஸ் என்ற சமூக ஆர்வலர் இதுகுறித்துக் கூறும்போது, ''ரயில்வே சமையல் பிரிவு, என்ன சமையல் பொருட்களை என்ன தொகைக்கு வாங்கியுள்ளது என்று ஜூலை 2016-ல் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டிருந்தேன். ஆனால் எனக்கு

பதிலளிக்க ரயில்வே நிர்வாகம் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து நான் முறையீடு செய்தேன். மேல்முறையீட்டு அதிகாரி 15 நாட்களுக்குள் எனக்குத் தகவல்களைத் தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் எந்த பதிலும் வரவில்லை.

’உச்ச விலையை விட பல மடங்கு அதிகம்’

இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக முறையீடு செய்தேன். அப்போது ரயில்வே நிர்வாகம் அளித்த தகவல்கள் என்னைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. அதில் ரூ.25 மதிப்புள்ள 100 கிராம் தயிர், ரூ.972-க்கு வாங்கப்பட்டிருந்தது. அதேபோல அனைத்துப் பொருட்களுமே விதிக்கப்பட்டிருந்த உச்ச விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக வாங்கப்பட்டிருந்தது.

சமையல் பொருட்கள் அனைத்தும் ரயில்வே கேட்டரிங் துறையால் வாங்கப்பட்டுள்ளன. அவை சமையல் கிடங்கு, ஐஆர்சிடிசி மக்கள் உணவகங்ககள், ரயில்வே சமையலறைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

’டிஷ்யூ பேப்பரும்’

எலும்புத் துண்டுடன் கூடிய சிக்கன், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்டவையும் மிக உயர்ந்த விலைகளில் வாங்கப்பட்டுள்ளன. இதில் கை துடைக்கும் டிஷ்யூ பேப்பரும் அடக்கம்.

மார்ச் 2016-ல் 58 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் ரூ.72,034-க்கும் (1 லி. ரூ.1241), டாட்டா உப்பு 150 பாக்கெட்டுகளை ரூ.2,670க்கும் (அதாவது1 பாக்கெட்டின் விலை ரூ.49, உண்மையான விலை ரூ.15) வாங்கியுள்ளனர்.

அதேபோல, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ.59 என்ற வீதத்தில் வாங்கப்பட்டுள்ளன. சமோசாக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு மாதிரியான சில பொருட்கள் மட்டுமே சரியான விலைக்கு வாங்கப்பட்டுள்ளன.

ரயில்வே அறிக்கைகள் ரயில் உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறியுள்ளன. ஆனால் ஆர்டிஐ மூலம் உண்மையான நிலையும், நஷ்டத்துக்கான காரணமும் தெரிய வந்துள்ளது'' என்கிறார்.

’தட்டச்சுப் பிழை’

இதுகுறித்துப் பேசிய ரயில்வே கோட்ட மேலாளர் ரவிந்திர கோயல், ''இது தட்டச்சுப் பிழையாகத்தான் இருக்க வேண்டும். இதுகுறித்து விசாரிக்க உள்ளேன்'' என்றார்.

முன்னாள் பொது மேலாளர் சுபோத் ஜெயின் பேசும்போது, ''பொருட்களை வாங்குவதற்கு முறையான குழுக்கள் இருக்கின்றன. அவையே விலையை முடிவு செய்கின்றன'' என்றார்.

ரயில்வே சமையல் பிரிவில் ஊழலா?

விலை உயர்வு குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ரயில்வே அதிகாரி கூறும்போது, ''இது ஆவணங்களில் மட்டும் ஏற்பட்ட பிழை இல்லை. ரயில்வே நட்டத்தில் இயங்குவதற்கு இத்தகைய ஊழல்களே காரணம். இத்தகைய சம்பவங்கள் உரிய முறையில், தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in