Published : 26 Dec 2013 04:36 PM
Last Updated : 26 Dec 2013 04:36 PM

ஆம் ஆத்மிக்கு வெளிநாட்டு நிதியா?- மத்திய உள்துறை விசாரணை

வெளிநாட்டு நிதி பெறுதல் தொடர்பான 'வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம்' மீறப்பட்ட குற்றச்சாட்டில், ஆம் ஆத்மி கட்சி தன் தரப்பு விளக்கத்தை அளித்திருந்தது. இதையடுத்து, அக்கட்சியின் கணக்குப் புத்தகங்களை ஆராய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சியினர் கொடுத்த விளக்கத்தில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய அம்சங்கள் உள்ளன. அது தொடர்பாக அக்கட்சியினருடன் பேசவுள்ளோம். அவர்களின் கணக்கு வழக்கு புத்தகங்களும் ஆராயப்படும்" என்றார்.

ஆம் ஆத்மிக்கு வெளிநாட்டு நிதி பெறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் படி மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக விசாரிக்கிறது.

“நாங்கள் ஏதாவது தவறு செய்திருப்பதாகக் கண்டறியப்பட்டால், இரு மடங்கு தண்டனையை ஏற்றுக் கொள்கிறோம்” என அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்பட மொத்தம் 63 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ. 19 கோடி நன்கொடையாகத் திரட்டப்பட்டது என ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக் ஷா இழுக்கும் தொழிலாளி தொடங்கி பெரும் தொழிலதிபர்கள் வரை ரூ.10 முதல் பல லட்சம் வரை நன்கொடையாக அளித்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது. ஊழலை அகற்றுவோம் என்ற கோஷத்துடன் களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி எங்கிருந்து வருகிறது என டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கேள்வியெழுப்பி இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x