Last Updated : 21 Feb, 2014 12:00 AM

 

Published : 21 Feb 2014 12:00 AM
Last Updated : 21 Feb 2014 12:00 AM

ஹெல்மெட்: பெங்களூரில் 25 ஆயிரம் பேர் மீது வழக்கு

கடந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் தலை கவசம் (ஹெல்மெட்) அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 25 ஆயிரம் பேர் மீது அதிரடியாக போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமல் லாமல் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வர்களிடம் ரூ.100 அபராதமும் வசூலித்துள்ளனர்.

இதுகுறித்து பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீஸ் டிசிபி எஸ்.கிரீஷ் வியாழக்கிழமை

'தி இந்து'விடம் கூறியதாவது:

சமீப காலமாக பெங்களூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந் த‌து. இதனால் விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக் கையும் உயர்ந்தது. எனவே, சாலை விதிமுறைகளை மீறுவோரைக் கட்டுப்படுத்த பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீஸ் முடிவு செய்தனர்.

கடந்த 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையில் பெங்களூரின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டோம். இதன் காரணமாக‌, கடந்த ஒரு வாரத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 25 ஆயிரத்து 117 பேர் சிக்கினர்.

இந்திய மோட்டார் சட்டம் 177-ம் பிரிவின்கீழ் அவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 3 ஆயிரத்து 658 பேரிடம் அபராதமாக தலா ரூ.100 வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

தலைகவசம்-உயிர் கவசம்

டெல்லியைச் சேர்ந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சாலை விபத்துகள் குறித்து சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், "ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வ‌தாலே பெரும்பாலானோர் சாலை விபத்துகளில் பலியாகிறார்கள்.

எனவே, வெளிநாடுகளைப் போல வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் அதில் அமர்ந்து செல்பவர்களும் (குழந்தைகள் உட்பட) கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

பெங்களூரில் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பலியானவர்களில் 38 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை.

2013-ம் ஆண்டு நடந்த 5 ஆயிரத்து 230 சாலை விபத்துகளில் 771 பேர் ஹெல்மெட் அணியாததால் பரிதாபமாக பலியாயினர். 4,289 பேர் படுகாயம் அடைந்தனர். பலியான‌வர்களில் 511 பேர் 35 வயதிற்கு குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அலட்சியம் ஏன்?

கர்நாடகம், தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் சாலை விபத்துகளில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தலைக் கவசம் அணியவில்லை. தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவோரிடம் போக்குவரத்து போலீஸார் லஞ்சமாக 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு விட்டுவிடுகின்றனர். இதனால் தலைக் கவசம் அணிவதை பொதுமக்கள் அலட்சியமாக நினைக்கிறார்கள். போக்குவரத்து போலீஸாரில் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x