Last Updated : 30 Jun, 2016 08:01 AM

 

Published : 30 Jun 2016 08:01 AM
Last Updated : 30 Jun 2016 08:01 AM

ஜூலை 18-ல் முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற அரசு உறுதி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா உட்பட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு உறுதியாக உள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்களுக் கான அமைச்சரவை குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடை பெறும். கூட்டத் தொடர் 20 நாட்கள் நடைபெறும். எனினும், தேவைப் பட்டால் கூட்டத் தொடரை இரண்டு மூன்று நாட்கள் நீட்டிக்கவோ அல்லது குறைத்து கொள்ளவோ முடிவெடுக் கப்படும்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற தற்போது மத்திய அரசுக்கு போதுமான ஆதரவு கிடைத்துள்ளது. எனினும், இந்த மசோதா மாநிலங்கள் சம்பந்தப்பட்டது என்பதால், அனைத்து அரசியல் கட்சியினரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த மசோதாவை நிறைவேற்ற நினைக்கிறோம். ஒருவேளை கருத்தொற்றுமை ஏற்படா விட்டால், மழைக்கால கூட்டத் தொடரில் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

ஜிஎஸ்டி மசோதாவை கடுமையாக எதிர்த்து வரும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு வெங்கய்ய நாயுடு பதில் அளிக்கை யில், ‘‘காங்கிரஸ் உட்பட எல்லா கட்சி யினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தயாராக இருக்கிறார்’’ என்றார்.

தவிர லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா (திருத்த) மசோதா, மருத்துவம், பல் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான மசோதா உட்பட சில முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x