Last Updated : 28 Nov, 2014 10:38 AM

 

Published : 28 Nov 2014 10:38 AM
Last Updated : 28 Nov 2014 10:38 AM

பிச்சைக்காரர்கள் வசிக்கும் இடத்தில் திருநங்கைகளை அடைத்து வைத்தது சரிதான்: பெங்களூரு போலீஸ் கமிஷனர் விளக்கம்

பெங்களூருவில் சாலையில் பிச்சை எடுத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்கு களில் கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பிச்சைக்காரர்கள் வசிக்கும் இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது சட்டப்படியான நடவடிக்கை என பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த 3 தின‌ங்களாக பெங்களூருவில் பிச்சை எடுத்த 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள‌னர். இதில் 43 பேர் திருநங்கைகள். கைதான அனைவரையும் போலீஸார் மாகடி சாலையில் உள்ள பிச்சைக்காரர்கள் காலனியில் அடைத்துள்ளனர். மேலும் பல்வேறு வழக்குகளின் கீழ் சுமார் 200 திருநங்கைகள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து திருநங்கை களும், பல்வேறு மனித உரிமை ஆர்வலர் களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.

விடுவிக்க வேண்டும்

கைது செய்யப்பட்ட திருநங்கைகளை உடனடியாக விடுவிக்கும்படி பெங்களூருவை சேர்ந்த திருநங்கைகள் அமைப்பை சேர்ந்த அக்கை பத்மசாலி நேற்று கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜை சந்தித்து மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அக்கை பத்மசாலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“200-க்கும் மேற்பட்ட திருநங்கைகளை பல்வேறு பொய் வழக்குகளில் போலீஸார் கைது செய்துள்ளனர். பிச்சைக்காரர்க‌ள் காலனியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை வழக்கறிஞர்கள் உட்பட யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. போலீஸார் மீது நடவடிக்கை எடுத்து, திருநங்கைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்'' என்றார்.

இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி கூறும்போது, ‘‘போலீஸார் திருநங்கைகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறுவது தவறு. சாலையில் பிச்சை எடுத்தவர்களை சட்டப்படி கைது செய்து பிச்சைக்காரர்கள் காலனியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளோம். பிச்சைக்காரர்கள் தடுப்பு சட்டத்தின்படி திருநங்கைகள் கைது செய்யப்பட்டு, பிச்சைக்காரர்களுடன் அடைத்து வைத்திருப்பது சட்டப்படி சரியே'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x