Published : 24 Jan 2014 09:40 AM
Last Updated : 24 Jan 2014 09:40 AM

பா.ஜ.க.பொருளாதாரத் திட்டம் வெற்று அலங்காரம்: யெச்சூரி

பாஜகவின் பொருளாதார திட்டம் வெற்று அலங்காரச் சொற்களால் ஆனது; அதில் உள்ளடக்கம் ஏதுமில்லை என மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி சாடியுள்ளார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘பீப்பிள்’ஸ் டெமாக்ரசி’ இதழ் தலையங்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது:

பாஜகவின் பொருளாதாரத் திட்ட அறிக்கையில், அதனை அமல்படுத்துவதற்கான எவ்வித பரிந்துரைகளும் இல்லை. பாசிச மனப்பாங்குடைய, மக்களை உணர்ச்சி வசப்படச் செய்து அதன் மூலம் அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் பாஜகவால் வரையப்பட்ட இப் பொருளாதார அறிக்கை வெறும் சொல் அலங்காரத்தால் ஆன அறிக்கை. அதில் உள்ளடக்கம் எதுவும் இல்லை.

பாஜக சொல்லியிருக்கும் சில மிகப்பெரிய இலக்குகளை எப்படி அடையப்போகிறது என்ற கேள்விக்கு அக்கட்சி தொடர்ந்து மௌனம் சாதிக்கிறது. 1930களில் வாழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜார்ஜி திமித்ரோவ், “பாசிசம், ஊழலற்ற லஞ்ச லாவண்யமற்ற நேர்மையான அரசாங்கத்தைத் தருவதாக மக்களிடம் உறுதி கூறும்.

ஆனால், பின்னர், ஊழல் மலிந்த, கைக்கூலிகள் நிறைந்த அரசாங்கத்திடம் மக்களைத் தள்ளிவிடும்” என்றார். அதைப் போலத்தான் பாஜகவின் பொருளாதாரத் திட்ட அறிக்கையும் இருக்கிறது.

பாஜகவின் பொருளாதார அறிக்கையை இன்டியா இன்க் புகழ்ந்திருப்பதும் இத்தன்மையில்தான். பாஜக, காங்கிரஸ் இருகட்சிகளையும் தவிர்த்து விட்டு, மாற்று அரசியல் மூலம் நாட்டுக்குத் தேவையான மாற்றுக் கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு, யெச்சூரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x