Published : 18 Aug 2016 06:39 PM
Last Updated : 18 Aug 2016 06:39 PM
இப்போது மத்திய அமைச்சராக உள்ள வி.கே.சிங் ராணுவ தளபதியாக இருந்தபோது, எனது பதவி உயர்வைத் தடுப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி எனக்கு தடை விதித்தார் என ராணுவ தலைமை தளபதி தல்பிர் சிங் சுஹாக் குற்றம்சாட்டி உள்ளார்.
ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ரவி தஸ்தனே உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் ராணுவ தலைமை தளபதி ஆவதற்கான தகுதி பெற்றிருந்தேன். ஆனால், அப்போதைய தலைமை தளபதி விக்ரம் சிங், இதைத் தடுத்துவிட்டார். அத்துடன் தல்பிர் சிங் சுஹாக் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து அவரை தளபதியாக நியமிக்க உதவினார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு தொடர்பாக, தல்பிர் சிங் சுஹாக் உச்ச நீதிமன்றத்தில் புதனன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
அப்போது ராணுவ தளபதியாக இருந்தவரும் இப்போதைய மத்திய இணை அமைச்சருமான வி.கே.சிங், என் மீது பொய்யான, ஆதாரமற்ற, கற்பனையான குற்றச்சாட்டுகளைக் கூறி, 2012-ம் ஆண்டு மே 19-ல் நோட்டீஸ் அனுப்பினார்.
நீதிமன்ற விசாரணையில் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கிடைக்காதபோதும், அடுத்த தளபதியாக எனக்கு பதவி உயர்வு கிடைப்பதைத் தடுப்பதற்காக, பழிவாங்கும் நோக்கத்தில் சட்டவிரோதமாக அந்த நோட்டீஸை அனுப்பினார். அதன் அடிப்படையில் என் மீது ஒழுங்கு நடவடிக்கை (தடை) எடுத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராணுவ தளபதியாக இருந்த வி.கே.சிங் 2012-ம் ஆண்டு மே 31-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து ஜெனரல் விக்ரம் சிங் அடுத்த தளபதியாக பதவியேற்றார். அவர், தல்பிர் சிங் மீது வி.கே.சிங் விதித்த தடையை திரும்பப் பெற்றார். அத்துடன் தல்பிர் சிங்குக்கு கிழக்குப் படைத் தளபதியாக (2012, ஜூன் 15) பதவி உயர்வு வழங்கினார். 2014-ம் விக்ரம் சிங் ஓய்வுபெற்ற பிறகு தல்பிர் சிங் தளபதியாக பதவி வகித்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT