Published : 28 Dec 2013 12:00 AM
Last Updated : 28 Dec 2013 12:00 AM

ஆதர்ஷ் அறிக்கையை மகாராஷ்டிர அரசு நிராகரித்தது தவறு: ராகுல்

ஆதர்ஷ் ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை மகாராஷ்டிர அரசு நிராகரித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை, அந்த அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



மக்களவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்களுடன் ராகுல் காந்தி டெல்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதர்ஷ் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்:

ஆதர்ஷ் ஊழல் விவகாரம் தொடர்பான அறிக்கையை நிராகரித்ததை தனிப்பட்ட முறையில் நான் ஏற்கவில்லை. அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த ஊழல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என்றார்.

பேட்டியின்போது உடன் இருந்த மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாணிடம் இதுகுறித்து கேட்டபோது, தனது அமைச்சரவை சகாக்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.ஏ. பாட்டீல் தலைமையில் 2 நபர் கமிஷன் விசாரணை நடத்தியது. அந்த கமிஷன் அளித்த அறிக்கையில் 3 முன்னாள் முதல்வர்கள் மீதும், பல்வேறு அரசியல் தலைவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை மகாராஷ்டிர சட்டமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்த மகாராஷ்டிர அரசு அறிக்கையை நிராகரித்தது. இதனை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் ராகுல் காந்தியும் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளார்.

பாஜக மீது மறைமுக தாக்கு

ஊழலை தடுப்பது தொடர் பான ஏராளமான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்படாமல் நிலுவை யில் உள்ளன. அவற்றை நிறைவேற்றுவது தொடர்பாக செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசத் தொடங்கினால் எதிர்க்கட்சிகள் இருஅவைகளையும் முடக்கி விடுகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றன.

ஊழலை எதிர்த்து வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் செயல்திறனில் அவர்கள் தங்கள் பதிலை வெளிப்படுத்த வேண்டும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் லோக்ஆயுக்த சட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x