Published : 03 Nov 2014 02:28 PM
Last Updated : 03 Nov 2014 02:28 PM
டெல்லியில் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக இருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கிடம் டெல்லி பாஜக தலைவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாதயா, இன்று (திங்கள்கிழமை) காலை துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்துப் பேசினார். அப்போது, டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தனது நிலைப்பாட்டை துணை நிலை ஆளுநரிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது.
சந்திப்பின்போது, டெல்லியில் ஆட்சி அமைப்பதற்குப் பதிலாக மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள பாஜக விரும்புவதாக சதீஸ் உபாதயா தெரிவித்ததாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில். இன்று மாலை பாஜக தலைவர், மீண்டும் ஒரு முறை துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் புதிய ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசிக்க கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி காலையில் பாஜக தலைவர் சந்தித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினரும் ஆளுநரை சந்திக்கிறார்கள்.
ஆம் ஆத்மி கட்சிக்கு மாலை 5.45 மணியளவிலும், காங்கிரஸ் கட்சிக்கு மாலை 3.45 மணியளவிலும் ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில், பாஜக 31 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான அகாலி தளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தது.
ஆனால், எம்எல்ஏக்களாக இருந்த ஹர்ஷ்வர்தன், ரமேஷ் பிதூரி, பர்வேஸ் வர்மா ஆகியோர் எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளதால், பாஜக தரப்பில் 28 எம்எல்ஏக்களே உள்ளனர்.
இரண்டாவது பெரிய கட்சியான ஆம் ஆத்மியில் தற்போது 27 எம்எல்ஏக்கள் உள்ளனர். எம்எல்ஏ வினோத் குமார் பென்னி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT